பிளஸ் 2 கணித தேர்வில் 'பிட்' தேர்வு முடிவை வெளியிடலாம்
'திருச்சி துறையூர் சவுடாம்பிகா மெட்ரிக் பள்ளியில், பிளஸ் 2 கணிதத் தேர்வில் 'பிட்' வைத்திருந்ததாக, 5 மாணவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு முடிவை, வெளியிட வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி துறையூரில் சவுடாம்பிகா மெட்ரிக் (ஆண்கள்) பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 2 மாணவர்கள் 2016 மார்ச் 18 ல் கணிதத் தேர்வு எழுதினர். அப்போது, 5 மாணவர்கள் அனுமதிக்கத்தகாத துண்டுத்தாள்களை (பிட்) மறைத்து வைத்திருந்ததை பறக்கும்படையினர் கண்டறிந்தனர். இம்மாணவர்களின் அனைத்து பாட மதிப்பெண்களையும் ரத்து செய்து, 2016 அக்டோர் மற்றும் 2017 மார்ச் தேர்வில் பங்கேற்க தடை விதித்து அரசு தேர்வுகள் திருச்சி மண்டல துணை இயக்குனர் மே 13 ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர் உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: கணிதத் தேர்வின் போது, விதிகளுக்கு புறம்பாக மாணவர்கள் எவ்விதமான துண்டுச் சீட்டுகளையும் வைத்திருக்கவில்லை. துண்டுச் சீட்டுகளை, பறக்கும் படையினர் கைப்பற்றவில்லை.
தேர்வு அறை கண்காணிப்பாளர் அல்லது பறக்கும் படை அதிகாரி விதிகள்படி, எழுத்துப்பூர்வமான வாக்குமூலம் பெறவில்லை. தேர்வு முடிவை வெளியிட வேண்டும். அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனு செய்திருந்தனர்.
நீதிபதி ஆர்.மகாதேவன், “சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் எவ்வித ஒப்புதலும், கையெழுத்தும் அதிகாரிகள் பெறவில்லை. இம்மாணவர்களின் தேர்வு முடிவை, உடனடியாக வெளியிட வேண்டும். அரசுத் தரப்பில் ஜூன் 15 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,” என்றார்.
அரசு வழக்கறிஞர் ஆயிரம் செல்வகுமார், மனுதாரர் வழக்கறிஞர் அந்தோணி அருள்ராஜ் ஆஜராயினர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.