பிளஸ் 2 தேர்வில் தோல்வி பயம்: தற்கொலை செய்த மாணவி தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வில், தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில், தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்ச்சி அடைந்தார்.வேலுார், கஸ்பாவைச் சேர்ந்த கம்பதாசன், 45, மகள் அபிராமி, 17. இவர், அங்குள்ள அரசு பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில், தேர்வு முடிவு வருவதற்கு முதல் நாள், வீட்டில், மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலுார் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. இதில் மாணவி அபிராமி, 845 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தார்.இதை அறிந்த அவரது பெற்றோரும், உறவினர்களும், கதறி அழுதனர். அதேபோல், வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டையில், டீக்கடை நடத்தி வருபவர் இஸ்மாயில், 45. இவரது மகள் வாகிதா, 17. பிளஸ் ௨ தேர்வில் தோல்வி அடைந்ததால், மனமுடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 'தோல்வியால் துவளாதீர்' பிளஸ் 2 தேர்வில் தோல்வியை தழுவிய மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், இளைஞர்கள் பலர், நம்பிக்கை ஊட்டும் வகையில், நல்ல கருத்துக்களை, வாட்ஸ் ஆப் மூலம் பரப்பி வருகின்றனர்.வாட்ஸ் ஆப் மூலம் வந்த ஒரு வாசகத்தில் கூறியிருந்ததாவது: 'பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்கள், விரைவில் நல்ல தொழில் துவங்கி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி, உங்களுடன் பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பை பெற்றுத்தர வாழ்த்துகிறேன்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தோல்வி பெரிய விஷயமல்ல. தோல்வியடைந்த பாடங்களை மீண்டும் எழுதி, வரும் கல்வியாண்டிலேயே, கல்லுாரிகளில் சேர முடியும் என்ற நம்பிக்கையான விஷயங்களை பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Facebook Comments
0
comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.