வாக்கு சாவடி மைய அலுவலர்களுக்கு நாளை 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு: ஆட்சியர் தகவல்
வாக்கு சாவடி மையங்களில் பணியாற்றும் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு சனிக்கிழமை (மே 7) நடைபெறும் என்று, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2,687 வாக்கு சாவடிகள் உள்ளன. இவற்றில், 13,234 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு, சனிக்கிழமை நடைபெறுகிறது.
வாக்கு சாவடி முதன்மை அலுவலர், வாக்கு சாவடி அலுவலர் நிலை-1 ஆகியோருக்கு காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையும், வாக்கு சாவடி அலுவலர் நிலை 2, 3, 4, 5 ஆகியோருக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் பயிற்சி நடத்தப்படும்.
இரண்டாம் கட்ட பயிற்சியானது, அலுவலர்கள் பணியாற்ற உள்ள சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பயிற்சி மையத்தில் நடைபெறும். பயிற்சிக்கான உத்தரவு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும். மேலும், செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பி வைக்கப்படும். பயிற்சி வகுப்பு நடைபெறும் மையங்களிலேயே அஞ்சல் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.