தபால் ஓட்டுப்பதிவு துவக்கம்
தமிழகத்தில், தபால் ஓட்டுப்பதிவு, நேற்று துவங்கியது.தமிழகத்தில், 3.30 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட, 4.92 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த, 58,114 பேர், ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு தபால் ஓட்டு அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு, இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு, நேற்று துவங்கியது. நேற்று ஒன்பது மாவட்டங்களில் நடந்த தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களுக்கு, தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டன. பயிற்சி மையத்தில், தபால் ஓட்டு அளிப்பது எப்படி என பயிற்சி அளிக்க, தேர்தல் கமிஷன் சார்பில், சேவை மையம் அமைக்கப்பட்டிருந்தது. தபால் ஓட்டு போடுவோர் வசதிக்காக, தொகுதி வாரியாக ஓட்டுப் பெட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன.
பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஓட்டு போட, தனி ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் சேகரமாகும் ஓட்டுகள், கடைசி நாளில் பிரிக்கப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பப்படும்.
தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, கடைசி கட்ட பயிற்சி வகுப்பு, 14ம் தேதி நடைபெறும். அன்றும் தபால் ஓட்டு பதிவு செய்யலாம். அன்றும் ஓட்டு போடாதவர்கள், தபால் மூலம் அனுப்பலாம். தேர்தல் நடத்தும் அலுவலர் அறை முன் வைக்கப்படும் பெட்டியில் ஓட்டு போடலாம். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும், 19ம் தேதி காலை, 8:00 மணிக்குள், தபால் ஓட்டுகள் வந்து சேர்ந்துவிட வேண்டும்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.