பள்ளியில் 'தள்ளாடிய' மாணவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்
அரசுப்பள்ளி மாணவர் குடிபோதையில் தள்ளாடியபடி, வகுப்புக்கு வந்த கொடுமை அரங்கேறியுள்ளது. அந்த மாணவனை, பள்ளி தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்' செய்தார். மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, மக்களும், மாணவர்களும் போராட்டம் நடத்தியும் பலன் கிடைக்கவில்லை. தற்போது, படிப்படியாக அமல்படுத்துவதாக, 500 கடைகளை அரசு மூடியுள்ளது. அதிலும், பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை மூடவில்லை என்ற புகார் பரவலாக உள்ளது. இதற்கான அவசியத்தை வலியுறுத்தும் வகையில், வேளச்சேரியில் நேற்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வேளச்சேரி ராஜலட்சுமி நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர், நேற்று காலை, 10:00 மணியளவில், தாமதமாக வகுப்புக்கு வந்துள்ளார்.
தள்ளாடியபடியே, வகுப்புக்கு வந்த அவர், அங்கேயே வாந்தி எடுத்துள்ளார். இதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த ஆசிரியைகள், தலைமை ஆசிரியையிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த மாணவரை, தலைமை ஆசிரியை விசாரித்துள்ளார். விசாரணையில், அந்த மாணவர், அருகிலுள்ள மதுக்கடையில் குடித்து விட்டு, வகுப்புக்கு வந்தது தெரியவந்தது. உடனே, அவரை 'சஸ்பெண்ட்' செய்த தலைமை ஆசிரியை, வீட்டிற்குத் திருப்பி அனுப்பினார். ஒன்பதாம் வகுப்பு மாணவர், குடிபோதையில் பள்ளிக்கு சென்ற சம்பவம், பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.