கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் காற்றில்...பறக்குது! கடந்தாண்டில் 37 சதவீத மாணவர்களே சேர்க்கை
ஏழை மாணவர்களும் கல்வி பயிலும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டம், கடலுார் மாவட்டத்தில் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் இச்சட்டத்தின் கீழ் மொத்த ஒதுக்கீட்டில் 37 சதவீத மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.
தனிமனித மற்றும் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள கல்வியை, அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்கிடும் பொருட்டு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை கடந்த 2011ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.
இச்சட்டத்தில், 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனைவரும் அவர்களின் குடியிருப்புக்கு அருகிலிருக்கும் பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமையை உறுதி செய்துள்ளது.
அதற்கேற்ப, இச்சட்டத்தின்படி தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இவர்களுக்கான கல்விக் கட்டணத்தை, கல்வியாண்டின் தொடக்கத்தில் ஒரு பகுதியும், ஆண்டு இறுதியில் மாணவர் வருகைப் பதிவேடு மற்றும் மதிப்பீட்டு அறிக்கையும் பள்ளிகளிடம் பெற்ற பின் பள்ளியின் வங்கிக் கணக்கில் பள்ளிக்கல்வித் துறை செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு கல்வி ஆண்டும் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் (எல்.கே.ஜி.,) மொத்த மாணவர் எண்ணிக்கையில் 25 சதவீத இடங்களை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கிட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள கடலுார் மாவட்டத்தில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த முன்வருவதில்லை. இதை, அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.
மாவட்டத்தில் உள்ள 266 தனியார் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்பில் மொத்தம் 9,570 இடங்கள் உள்ளன. அதில் 25 சதவீதமான 2,517 இடங்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் ஏழை மாணவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், கடந்த (2015-16) கல்வியாண்டில் 368 மாணவர்கள் மட்டுமே கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்த பள்ளிகளில் 16 பள்ளிகள் மட்டுமே இச்சட்டத்தை மதித்து இட ஒதுக்கீட்டை பூர்த்தி செய்தன. 38 பள்ளிகள் இட ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தையும், 39 பள்ளிகள் 25 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்தன. 173 பள்ளிகள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் ஒரு மாணவர்களை கூட சேர்க்கவில்லை.
அதேபோன்று, மாவட்டத்தில் உள்ள 171 மெட்ரிக் பள்ளிகளில் மொத்தமுள்ள 8,760 இடங்களில் 2,215யை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால், 1,373 மாணவர்கள் மட்டுமே இச்சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். 969 இடங்களை பூர்த்தி செய்யவில்லை.
மொத்தமுள்ள ௧௭௧ மெட்ரிக் பள்ளிகளில் 45 பள்ளிகள் மட்டுமே சட்டத்தை மதித்து இட ஒதுக்கீட்டை பூர்த்தி செய்துள்ளன. 84 பள்ளிகள் 50 சதவீத இடங்களையும், 31 பள்ளிகள் 25 சதவீத இடங்களை மட்டுமே பூர்த்தி செய்தன. 11 பள்ளிகள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மாணவரை கூட சேர்க்கவில்லை.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 437 தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 4,732 ஏழை மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால், கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் 1,741 மாணவர்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்பு கிடைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3,126 இடங்கள் நிரப்பப்படவே இல்லை.
இதே நிலைதான் இந்த கல்வி ஆண்டிலும் தொடர்கிறது. இனியேனும் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தனிக் கவனம் செலுத்தி, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள மொத்த இடங்களையும் தகுதியுள்ள மாணவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.