திறந்த அன்றே பள்ளிக்கு பூட்டு: மாணவர்கள் போராட்டம்
திருவண்ணாமலை அருகே பள்ளி திறந்த முதல் நாளிலேயே, தலைமை ஆசிரியர் நியமனத்தில் நிர்வாக குளறுபடி காரணமாக, பள்ளிக்கு பூட்டு போட்டு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
திருவண்ணமலை அடுத்த பள்ளிகொண்டாபட்டு கிராமத்தில், அரசு நிதியுதவி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 400 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில், நிர்வாக சீர்கேடு காரணமாக, தலைமை ஆசிரியர் நியமனத்தில் குளறுபடி நடந்ததாக கூறப்படுகிறது.
பணிமூப்பு அடிப்படையில் தலைமை ஆசிரியரை நியமனம் செய்யாமல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பணியில் சேர்ந்த பெண் ஆசிரியருக்கு, தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, பள்ளி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், நேற்று காலை பள்ளிக்கு பூட்டு போட்டனர். பள்ளிக்கு மாணவர்களை அனுப்பாமல், பள்ளியின் எதிரே திரண்டு முற்றுகையிட்டனர். பின், பள்ளியின் எதிரே பந்தல் அமைத்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது, பள்ளியை நிர்வகித்து வரும் தாளாளரும், நிர்வாகியும் தங்களது குடும்ப பிரச்னையை பள்ளி நிர்வாகம் மீது திணிப்பதாகவும், இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும், பெற்றோர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
இதையடுத்து, போலீசார், பள்ளி எதிரே குவிக்கப்பட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே பள்ளியில் முறையாக அனுமதி பெறாமல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனால், மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.