அது கஞ்சா சாக்லேட் தான்! : பரிசோதனையில் உறுதி
சென்னை மாநகராட்சி பள்ளி அருகே விற்கப்பட்ட சாக்லேட்டில் கஞ்சா கலந்துள்ளது, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளி அருகே, பெட்டிக் கடையில், கஞ்சா சாக்லேட் விற்கப்பட்டு வந்தது. இதை வாங்கி சாப்பிட்ட, சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பரத், 13, என்ற மாணவன், ஆபத்தான நிலையில், எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். முதல்வர் தொகுதியில் நடந்த இந்த சம்பவம், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம், நமது நாளிதழ் செய்தியால், வெளிச்சத்துக்கு வந்த நிலையில், தற்போது, தமிழகம் முழுவதும், பள்ளிகள் அருகே உள்ள கடைகளில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் போலீசார், சாக்லேட் மாதிரி எடுத்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள மருந்துகள் உரிமம் வழங்கும் அமைப்பினர், சாக்லேட்டில் என்னென்ன கலந்துள்ளன என்பது குறித்து, பரிசோதனை நடத்தினர்.
அதில், 'கன்னாபிஸ் சட்டைவா' என்ற ரசாயன பெயர் கொண்ட, கஞ்சா கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்டும் காணாத கார்ப்பரேஷன்! : சென்னையில், மாநகராட்சி பள்ளி அருகே உள்ள கடைகளில், இதுபோன்று கஞ்சா சாக்லேட் விற்பனை நடந்தும், மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கண்டும், காணாமல் இருந்துள்ளனர். இது போன்ற விவகாரங்களில் கடும் நடவடிக்கை எடுக்க, சட்ட அதிகாரம் இருந்தும், அவர்கள் கோட்டை விட்டுள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.