காஞ்சியில் பிளஸ் 1 மாணவன் சக மாணவனால் அடித்து கொலை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவன் சக மாணவனை கையால் தாக்கி கொன்ற சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் அருகே உள்ளது கா.மு.சுப்புராய முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளி. அங்கு, ௭௦௦ மாணவர்கள் படிக்கின்றனர். சின்ன காஞ்சிபுரம் சி.எஸ்.செட்டித் தெருவைச் சேர்ந்தவர் பாபு. அவரது மகன் ஜானகிராமன் 16; வணிகவியல் பிரிவில் பிளஸ் 1 படித்து வந்தான். அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவனுக்கும் அவனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் நேற்று முன்தினம் காலை 11:45 மணிக்கு வணிகவியல் வகுப்பு முடிந்து ஆங்கில வகுப்பு துவங்கும் முன் வகுப்பறைக்குள் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
அப்போது ஜானகிராமனின் கழுத்து மற்றும் முகத்தில் பலமாக தனது கைகளால் அந்த மாணவன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஜானகிராமன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளான். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர்கள் தெரிவித்த உடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஜானகிராமனை கொண்டு சென்றனர். பின் தீவிர சிகிச்சைக்காக, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஜானகிராமன் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:15 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தான்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியை சிவகாமி அளித்த புகாரையடுத்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து சக மாணவனை கைது செய்தனர். மாணவனை காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை கெல்லீசில் உள்ள, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நேற்று அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை விடப்பட்டது.
பள்ளி வகுப்பறையிலேயே சக மாணவனை தாக்கி கொன்ற சம்பவம் காஞ்சிபுரம் நகரவாசி
களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.