சி.பி.எஸ்.இ., தேர்வு தள்ளிவைக்க மறுப்பு
சி.பி.எஸ்.இ., தேர்வை தள்ளிவைக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.சென்னை, அண்ணா நகரை சேர்ந்த, வழக்கறிஞர் பி.ஆர்.பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால், பொது மக்களின் சகஜ வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளின் புத்தகங்கள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. குழந்தைகளின் பெற்றோர் பலர் உயிரிழந்துள்ளனர்; பலர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளனர்.இத்தகைய சூழ்நிலையில், சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலை கல்வி வாரிய தேர்வுகள், 2016, மார்ச் மாதம் நடக்க உள்ளது. மாணவர்களின் எதிர்காலம் இந்த தேர்வை நம்பித்தான் உள்ளது.எனவே, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வை தள்ளிவைக்கும்படி, சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், மனு விசாரணைக்கு வந்தது.மத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல் சீனிவாசன், ''பாதிக்கப்பட்ட பள்ளிகள், கூடுதலாக ஒரு மணி நேரம் செயல்படுகிறது; தேர்வை தள்ளிவைக்க தேவையில்லை; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,'' என்றார்.'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
இயற்கை பேரிடரை எதிர்கொள்ளும் நிலைமைக்கு, தமிழக மக்கள் வந்துள்ளனர். புனரமைப்பு பணிகள் முடியும் வரை, இளைஞர்களாக இருந்தாலும், குழந்தைகளாக இருந்தாலும், இந்த சூழ்நிலையில், சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்தியா முழுவதும், சி.பி.எஸ்.இ., தேர்வை மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்கள் மத்தியில், வெவ்வேறு அளவுகோலை கடைபிடிக்க முடியாது. 2016, மார்ச் மாதம், சி.பி.எஸ்.இ., தேர்வுகள் நடக்க உள்ளன.தற்போது தேர்வை தள்ளி வைப்பதால், இந்தியாவில் இதர பகுதிகளில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவர். தமிழக மாணவர்கள், இந்த கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும். அத்தகைய கடினமான பணியை எதிர்கொள்ள, சி.பி.எஸ்.இ., மத்திய, மாநில அரசுகள் ஆதரவு அளிக்கும் என நம்புகிறோம்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.