10ம் வகுப்பு மாணவர்கள் 8 பேருக்கு 'டிசி': அரசு பள்ளியில் தலைமையாசிரியர் நடவடிக்கை
விருதுநகரில் நுாறு சதவீத தேர்ச்சிக்காக அரசு பள்ளியில் எட்டு பேருக்கு 'டிசி' கொடுத்ததால் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.விருதுநகர் மாவட்டம் மூவரை வென்றான் அருகே உள்ளது எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலை பள்ளி. இப்பள்ளி கடந்த நான்கு ஆண்டுகளாக 10ம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் சரிவர படிக்காத பத்தாம் வகுப்பு மாணவர்கள் கண்ணன், சி.முனீஸ்வரன் உட்பட எட்டு பேருக்கு தலைமை ஆசிரியரால் 'டிசி' கொடுக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று விருதுநகரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் செய்தனர்.
பொதுத் தேர்வு
மாணவர் சி.முனீஸ்வரன் கூறுகையில்,“ தேர்வுகளில் ஆங்கிலம், கணிதம் பாடங்களில் தோல்வியுற்றேன். அரையாண்டு தேர்வில் தமிழ் தேர்வு மட்டும் எழுத அனுமதித்தனர். அதன் பின் அனுமதிக்கவில்லை. கடந்த மாதம் எனது பெற்றோரை அழைத்து 'டிசி'யில் கையெழுத்து வாங்கி அனுப்பி விட்டனர். தற்போது 'டிசி'யை பார்க்கும் போது 2015 செப்.,18ம் தேதி தலைமை ஆசிரியர் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் நான் கடந்த மாதம் வரை பள்ளி சென்று பாடங்களை படித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்னை பொதுத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்,”என்றார்.
மிரட்டல்
கண்ணன் தந்தை கோவிந்தராஜ்,“கடந்த மாதம் தலைமை ஆசிரியர் என்னை அழைத்து கண்ணன் சரியாக படிக்கவில்லை. 10 ம் வகுப்பு தேர்வை எழுதினால் பள்ளி கடந்த 4 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது நின்று விடும். 'டிசி'யை வாங்கி கொள்ளுங்கள்' என கூறி 'டிசி'யை கொடுத்தனர். தலைமையாசிரியரிடம் நான் கெஞ்சியபோது, ''இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியில் படிக்கும் உனது இரண்டாவது மகனையும் தேர்வை
எழுத விடாமல் 'டிசி' கொடுத்து விடுவதாக மிரட்டினார்,”என்றார்.ஏழ்மை மாணவர்கள்பள்ளி தலைமை ஆசிரியை மகேஷ்வரி,“ கண்ணனுக்கு காயமடைந்தால் ரத்தம் உறையாத நோய் உள்ளது. இதனால் அடிக்கடி விடுப்பு எடுத்து படிப்பதற்கு சிரமம் பட்டான். இதனால் படிப்பை தொடர முடியாததால் ஜூனில் 'டிசி' கொடுத்து விட்டேன். முனீஸ்வரன் பள்ளிக்கு ஒழுங்காக வராமல் இருந்தான். அவனது பெற்றோரை அழைத்து அறிவுரை கூறினேன்.
அவனது பெற்றோர் ஐ.டி.ஐ.,யில் சேர்ப்பதாக கூறி 'டிசி'யை வாங்கி சென்றனர். அதன் பின் சேர்க்க முடியவில்லை என கூறி மீண்டும் பள்ளியில் சேர்க்க கூறினார். இரு மாணவர்களும் ஏழ்மையில் இருந்ததால் மதியம்
சாப்பாட்டிற்காவது பள்ளிக்கு வரட்டும் என்ற எண்ணத்தில் வகுப்பிற்குள் அனுமதித்தேன்.
தவறான குற்றச்சாட்டு
மற்றொரு மாணவர் குடிப்பழக்கத்தை மறப்பதற்காக சிகிச்சை பெற அவனது பெற்றோரே 'டிசி'யை வாங்கி சென்றனர். இது போல் 'டிசி' கொடுத்த மாணவர்கள் தொடர்புடைய ஆவணங்கள் என்னிடம் உள்ளன. யாரையும் 100 சதவீத தேர்ச்சிக்காக 'டிசி' கொடுக்கவில்லை. இது தவறான
குற்றச்சாட்டு,”என்றார்.விசாரிக்க உத்தரவுமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி,“ மாவட்ட கல்வி அலுவலரை விசாரிக்க கூறிஉள்ளேன். விபரங்கள் கிடைத்தவுடன் கூறுகிறேன், ”என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.