சீருடை, பொது தேர்வு சிறப்பு வழிகாட்டி கிடைக்கவில்லை!ஆதிதிராவிடர் நலவிடுதி மாணவர்கள் தவிப்பு
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அரசு வழங்கும் பாய், தலையணை, போர்வை, சீருடை மற்றும் பொது தேர்வுக்கான சிறப்பு வழிகாட்டி ஆகியவை இதுவரை வழங்கப்படாததால், மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி கோட்டத்தில், 13; திருவள்ளூர் கோட்டத்தில், 9; பொன்னேரி கோட்டத்தில், 18 என, மொத்தம், 40 ஆதிதிராவிடர் நல விடுதிகள் உள்ளன. அவற்றில், 2,400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்கி படித்து வருகின்றனர்.
அந்த விடுதிகளை கண்காணிக்க, மூன்று கோட்டங்களிலும், தலா, ஒரு தாசில்தார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர, விடுதிகளில், மாணவர்கள் பாதுகாப்பிற்காக, வார்டன், பகல் மற்றும் இரவு காப்பாளர்கள், சமையலர்கள் உள்ளனர்.
விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், ஒவ்வொரு ஆண்டும், குளியல் சோப், பாய், தலையணை, போர்வை, உணவு சாப்பிடும் தட்டு, இரண்டு சீருடைகள் மற்றும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு கல்வி வழிகாட்டி வினா - -விடை புத்தகம் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆனால் இவை நடப்பாண்டு வழங்கப்படவில்லை.
அடுத்த மாதம், பொது தேர்வு துவங்க உள்ள நிலையில், சிறப்பு வழிகாட்டி வழங்கப்படாததால், மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படும் அவலநிலை உள்ளது.
விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களையும், வழிகாட்டி புத்தகத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என, விடுதி காப்பாளர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையினரிடம் கேட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை அவை எதுவும் கிடைக்கவில்லை என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பாய், தலையணை, போர்வை மற்றும் தட்டு போன்ற பொருட்கள், இதுவரை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு வரவில்லை. அவை வந்தவுடன், அந்தந்த விடுதி காப்பாளர்களிடம் ஒப்படைத்து, மாணவர்களுக்கு வினியோகம் செய்வோம். சிறப்பு வழிகாட்டி ஓரிரு நாட்களில் வழங்கப்படும்' என்றார்.
ஆதிதிராவிடர் நலவிடுதியில் தங்கி, அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறேன். எனக்கு பொது தேர்வுக்கான சிறப்பு வழிகாட்டி, சீருடைகள் இதுவரை தரவில்லை. சிறப்பு வழிகாட்டி புத்தகம் இருந்தால், பொது தேர்வுக்கு தயாராவதற்கு நன்றாக இருக்கும்.
எஸ்.ஜெகதீசன், திருத்தணி.
விடுதியில் தங்கி, மத்துார் அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறேன். விடுதியில், பாய், தலையணை, போர்வை, சீருடை மற்றும் வினா-விடை புத்தகம்
கொடுக்கவில்லை. சிறப்பு வழிகாட்டி இருந்தால், தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற முடியும்.
ஆர். அரசன், திருத்தணி.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.