ராமருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு
பாட்னா: ராமாயண காலத்தின் போது, எந்த காரணமும் கூறாமல், சீதையை காட்டிலேயே இருக்கும்படி தண்டனை கொடுத்ததாக கூறி, ராமர் மற்றும் அவருடைய சகோதரர் லட்சுமணன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, பீஹார் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் மாநிலத்தில் உள்ள சீதாமார்ஹி என்ற பகுதியில் தான், சீதை பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், சீதாமார்ஹியில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில், வழக்கறிஞர் சந்தன் குமார் சிங், ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'சீதையை காட்டிலேயே வசிக்கும்படி தண்டனை கொடுத்த ராமர் மற்றும் லட்சுமணன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்' என, கூறியுள்ளார். இந்த மனு, மாஜிஸ்திரேட் ராஷ் பிஹாரி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ''பகுத்தறிவுக்கும், உண்மைக்கும் எதிராக, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' எனக் கூறி, இந்த மனுவை, மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், 'ஹிந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில், இந்த வழக்கு தொடர்ந்த சந்தன் குமார் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பீஹாரில் உள்ள கோர்ட்டில், மூன்று வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
இதற்கிடையே, 'பொதுநலனுக்கும் சற்றும் பலன் இல்லாத விவகாரங்களை மனுவாக தாக்கல் செய்து, கோர்ட்டின் பொன்னான நேரத்தை வீணடிக்கும் இதுபோன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சட்டத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.