தமிழ் வழியில் படித்தவர்களுக்குமுன்னுரிமை கோரிய வழக்கு தள்ளுபடி
காவல்துறை பணியில் இருந்தவாறு, துறை ரீதியாக எஸ்.ஐ., பணிக்கு விண்ணப்பித்தவர்கள், தமிழ் வழியில் படித்திருந்தால், அதற்குரிய ஒதுக்கீட்டின் கீழ் பணி வழங்க உத்தரவிட வேண்டும்,' என தாக்கலான வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
மேலுார் துரைமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனுகுற்றப் புலனாய்வு பிரிவில் (கிரேடு 1) போலீசாக பணிபுரிகிறேன். 2015 பிப்.,8 ல் எஸ்.ஐ., பணிக்கு அறிவிப்பு வெளியானது. நான் விண்ணப்பித்தேன். தமிழ் வழியில் பி.ஏ.,(வரலாறு) படித்துள்ளேன். எஸ்.ஐ.,பணிக்கான எழுத்துத் தேர்வில், 63 சதவீத மதிப்பெண் வழங்கப்பட்டது. உடற்தகுதித் தேர்வில் வெற்றி பெற்றேன்.
'தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும்,' என எஸ்.ஐ.,பணி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையில் பணிபுரிவோர் அதாவது துறை ரீதியாக விண்ணப்பித்தவர்கள், தமிழ் வழியில் படித்திருந்தாலும், அவர்களுக்கு அதற்குரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. அவ்வாறு முன்னுரிமை வழங்கியிருந்தால், தேர்வில் நான் வெற்றி பெற்றிருப்பேன். ஆனால், பொதுப் பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
காவல்துறை பணியில் இருந்தவாறு, துறை ரீதியாக எஸ்.ஐ., பணிக்கு விண்ணப்பித்தவர்கள், தமிழ் வழியில் படித்திருந்தால், அதற்குரிய ஒதுக்கீட்டின் கீழ் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு துரைமுருகன் மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் கொண்ட அமர்வு, ''இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் தலையிட விரும்பவில்லை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்றது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.