746 மெட்ரிக் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அங்கீகாரம் நீட்டிப்பு இல்லை
தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்ட, 746 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு, மேலும் நீட்டிப்பு வழங்க வாய்ப்பு இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், கல்வித் துறை தெரிவித்துள்ளது.சென்னையைச் சேர்ந்த, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர் நாராயணன் தாக்கல் செய்த மனுவில், 'அரசு பிறப்பித்த வழிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கக் கூடாது; அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்; மூடப்படும் பள்ளிகளில் படிப்பவர்களை, அருகில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும்' என, கூறப்பட்டது.
இம்மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:அங்கீகாரம் இல்லாத பள்ளிகள், தற்காலிக அனுமதி பெற்று இயங்கி வருவதாகவும், கடைசியாக, 2015 - 16ம் கல்வியாண்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.கல்வித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'தனியார் பள்ளிகளுக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச நிலம் எவ்வளவு என்பதை நிர்ணயிக்க, பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.துறைத் தலைவர்களிடம், கருத்துக்கள் கோரப்பட்டு உள்ளன; அவை, கிடைத்த உடன், அதன்படி அரசு செயல்படும்' என, கூறப்பட்டுள்ளது.
மேலும், 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு, 2016 மே வரை, தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது; குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அரசு முடிவெடுக்க இருப்பதாலும், ஒரே ஒரு முறையாக அனுமதி வழங்கப்பட்டதால், மேற்கொண்டு நீட்டிப்பு வழங்க வாய்ப்பில்லை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, நாங்கள் மீண்டும் விசாரித்த போது, நீதிமன்றத்தில் இருந்த, மெட்ரிக் பள்ளிகள் அலுவலக கண்காணிப்பாளர் வெங்கடேசனிடம் தகவலை பெற்று, அரசு வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார். இதை, நாங்கள் பதிவு செய்கிறோம்.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.