மாணவிகளின் சம்பளத்தையும் 'ஸ்வாகா' செய்த பயிற்சி பள்ளிகள்: திண்டுக்கல்லில் மோசடி
;திண்டுக்கல்லில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட செவிலியர் பயிற்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகள் பெயரில் ரூ. பலலட்சம் மோசடி நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய மெடிக்கல் கவுன்சில், போர்டு ஆப் நர்ஸிங் கவுன்சில் ஆகியவை செவிலியர் பயிற்சி பள்ளி நடத்த அங்கீகாரம் வழங்குகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் உதவி செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளிகள் நடத்த 10 நிறுவனங்களுக்கு மட்டுமே மேற்கண்ட அமைப்புகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன. 35 நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதை ஆய்வில் கண்டுபிடித்த மருத்துவ இணை இயக்குனர் ரவிக்கலா இந்த நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட தடை விதித்தார். தற்போது இதில் படித்த 5 ஆயிரம் மாணவ, மாணவிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
பல லட்சம் ரூபாய் மோசடி:அங்கீகாரம் இல்லாத செவிலியர் பயிற்சி பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் தனியார் மருத்துவமனைகளில் பயிற்சி பெறுவர். இதற்காக அங்கீகாரம் பெறாத பயிற்சி பள்ளி நிர்வாகங்களும் தங்களிடம் பயின்ற மாணவிகளை, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளன.
அங்கு ஓராண்டாக பணிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு அந்த தனியார் மருத்துவமனைகள் சம்பளம் வழங்கியுள்ளன. அவற்றை அப்பயிற்சி பள்ளிகளே பெற்றுக் கொண்டுள்ளன. அதில் சிறுபகுதியைக் கூட பயிற்சி மாணவிகளுக்கு வழங்காமல் ஏமாற்றியுள்ளனர்.
மேலும் பள்ளிக்கு அங்கீகாரம் உள்ளதாக கூறி அவர்களிடமே ரூ.30 ஆயிரம் வரை வசூலித்துள்ளனர். விடுதியில் கழிப்பறை உட்பட போதிய வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டுள்ளனர்.
மருத்துவ இணை இயக்குனர் ரவிக்கலா கூறியதாவது: அங்கீகாரம் இல்லாத பயிற்சி பள்ளிகளில் செவிலிய மாணவர்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டுள்ளனர். பயிற்சி மாணவியருக்கு தனியார் மருத்துவமனைகள் தலா ரூ.3 ஆயிரம் வரை சம்பளமாக அளித்துள்ளனர். அந்த தொகையை பயிற்சி நிறுவனங்களே 'ஸ்வாகா' செய்துள்ளன. இதுபற்றி மாணவ, மாணவிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இது குறித்து கலெக்டரிடம் தெரிவிக்க உள்ளோம், என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.