இரண்டாவது மனைவியின் வாரிசு கருணைப் பணி கோர முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
'அரசு ஊழியரின் இரண்டாவது மனைவியின் வாரிசு, கருணைப் பணி நியமனம் கோர முடியாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி திம்மராஜபுரம் முத்துராஜ் தாக்கல் செய்த மனு:எனது தந்தை மாலையப்பன் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார். அவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால், எனது தாயை இரண்டாவது திருமணம் செய்தார். 2008 ல் பணியில் இருந்தபோது, விபத்தில் மாலையப்பன் பலியானார். கருணைப் பணி நியமனம் கோரி, துாத்துக்குடி எஸ்.பி.,க்கு மனு அனுப்பினேன். அவர்,'இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழந்தைக்கு கருணைப் பணி வழங்க முடியாது,' என 2010 ல் நிராகரித்தார். டி.ஜி.பி.,க்கு மனு அளித்தேன். அவர், எஸ்.பி.,யின் உத்தரவை உறுதி செய்து, எனது மனுவை நிராகரித்தார். இதை ரத்து செய்து, கருணைப் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, முத்துராஜ் மனு செய்திருந்தார்.
நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவு: ஒருவருக்கு ஒரு மனைவி என்பது அரசின் கொள்கை, விதி. அரசு பணியாளர் விதிகள்படி, எந்த ஊழியரும் முதல் மனைவி உயிருடன் உள்ளபோது, இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது. அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, அரசின் முன் அனுமதியின்றி, இரண்டாவது திருமணம் செய்ய முடியாது.
ஒருவருக்கு ஒரு மனைவி என்ற கொள்கையை செயல்படுத்தும் நோக்கில், இரண்டாவது மனைவி மற்றும் அவரது வாரிசுகள் கருணைப்பணி கோர முடியாத வகையில், நிபந்தனைகளை அரசு கொண்டு வந்தது.
சிறப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி, அரசிடமிருந்து அனுமதி பெற்று, இரண்டாவது திருமணம் செய்திருந்தால் மட்டுமே, அவரது வாரிசு கருணைப் பணி கோர முடியும். கருணைப் பணி என்பது, வாழ்வாதாரத்திற்காக அரசால் வழங்கப்படுவது. இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு, சொத்தில் உரிமை உள்ளதை காரணமாகக் கொண்டு, கருணைப் பணியை உரிமையாக கோர முடியாது. சொத்துரிமைக்கும், கருணைப் பணிக்கும் வேறுபாடு உள்ளது. மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.